தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து தமிழகத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக முதல்வர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களுடன் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டத்தை கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சிபாஸ் கல்யாண் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் (ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூர) நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி தலைவர் எஸ்.கே.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் ஸ்ரீகாந்த், தாளாளர் ஏ ஆர் பிரபாகரன், கல்லூரி முதல்வர் பழனி ஆகியோர் வரவேற்றனர். இதில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவகளுக்கு போதைப் பொருள் உபயோகிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் குறித்து தொலைபேசி மற்றும் செல்போன் மூலமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய எண்ணையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்தியபிரியா, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்தியப்பிரியா, போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளிடையே எடுத்துச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கஞ்சா வேட்டை-1 கஞ்சா வேட்டை 2 ஆகிய திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்திருப்பதாகவும், இது சம்பந்தமாக 300 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், யார் யாருடன் வங்கி பண பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கஞ்சா கடத்தல் வழக்கில் சிறு சிறு வழக்குகள் போடப்படுவதால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவதால் கடுமையான தண்டனை விதிக்கப்படுமா என கேட்டதற்கு குண்டர் தடுப்பு உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்வாணையம் மூலம் விரைவில் காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.