கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23ம் தேதி நின்றுக் கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து இரண்டாக சிதறியது. இதில், காரில் இருந்த ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகளும், பயங்கர வெடிகுண்டுகள் செய்வதற்கான பொருட்களும் கைப்பற்றபட்டு இருந்தது.
இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் 5 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.