சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் 33வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,35,364 ஆக உள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 600ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 33வது மெகா தடுப்பூசி முகாம் 2,000 இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வரை 4,34,244 நபர்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

சென்னையில் தகுதியுடைய முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களைப் பொறுத்தவரையில் 43,63,475 பேர் உள்ளனர். சென்னையில் இதுவரை நடைபெற்ற 32 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 40,34,207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 33வது மெகா தடுப்பூசி முகாம் 2,000 இடங்களில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.