ரெயில்வே பாதுகாப்பு படையினர் மனித கடத்தலில் இருந்து மொத்தம் 183 சிறுவர் சிறுமிகளை கடந்த ஒரு மாதத்தில் மீட்டு உள்ளனர்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இந்திய . இங்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரெயில்வே உள்ளது. இதில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த வழித்தடத்தை சில கொடூர கும்பல் தங்கள் தேவையற்ற தேவைக்கும் மனித கடத்தல்களுக்கும் அதிகம் பயன்படுத்தி கொள்கின்றனர். அவ்வாறு அந்த கும்பலிடம் சிக்கும் நபர்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்த செலவில், அதிக தொலைவுக்கு கடத்தி செல்வதற்கு ரெயில்வேயை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதனை குற்றச்செயல்களை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து 2,178 பேர் மீட்கப்பட்டுள்ளனர் . குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் என பாதுகாப்பும், கவனமும் தேவைப்பட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து அவர்களை துயரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டது.
இதற்காக அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து ரெயில்வே படையினர் பணிபுரியும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. உடனுக்குடன் கடத்தல் வழக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் செயலாற்றுவது, கடத்தல்களை கண்டறிவது ஆகிய பணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

இதில் 151 சிறுவர்கள், 32 சிறுமிகள் மற்றும் 3 பெண்களை கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர். இந்த குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 47 பேரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.