திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்ட போலீசாருக்கு துரை ஷிப் பாரி கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேதர பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கமல்பூர் காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதில் ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு அருகே இருந்த அந்த குழியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் அந்த குழியை மீண்டும் தோண்டினோம். அப்போது அதில் மேலும் 3 உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தது. கிடைத்த 4 சடலங்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண்.
பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அதே குடும்பத்தில் உள்ள 15 வயது சிறுவன் தான் இந்த படுகொலைகளைச் செய்துள்ளான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
உயிரிழந்தவர்கள் பாதல் தேப்நாத் (வயது 70), சுமிதா தேப்நாத் (வயது 32), சுபர்னா தேப்நாத் (வயது 10) மற்றும் ரேகா தேப் (வயது 42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கோர படுகொலைகளை சிறுவன் எதற்காக செய்தார் சொந்த குடும்ப உறுப்பினர்களையே கொலை செய்யும் துணிச்சல் எப்படி வந்தது என பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.