தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர் . இதன் அடிப்படையில் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும் என தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு கட்டும் வகையில் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீலம் மற்றும் பச்சை நிற பாலின் விலையில் மாற்றம் இல்லை.
ஆரஞ்சு பால் அதாவது நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும்,
எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.
நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்த கொள்முதல் விலை உயர்வால், சுமார் 4.20 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது