விழுப்புரம் அருகே உள்ள முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் ரியாஸ் ஆதான் (24). இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உணவு பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விழுப்புரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, ரியாஸ் ஆதான் தனது இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜானகிபுரம் பகுதியில் சென்றபோது அவர் மீது திடீரென மின்னல் தாக்கியது.

இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.