பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். பிரபல நடிகை தீபிகாவின் கணவரான ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 83 திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேலும் கபில் தேவாக வாழ்ந்த ரன்வீர் சிங்கின் சிறப்பான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
அப்படி பலரது பாராட்டை பெற்ற ரன்வீர் சிங் சமீபத்தில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர், கடந்த மாதம் நிர்வாணமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது இந்த நிர்வாண போடோஷூட்டுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பின.
இதையடுத்து இந்த போட்டோஷூட் மூலம் ரன்வீர் சிங், பெண்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ரன்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அது பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் ரன்வீர் தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டதாகவும், இந்த போட்டோஷூட் இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் செய்ததாகவும் கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.