மசூதியில் தொழுகை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரை நான்கு பேர் மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் உமர் பாஷா. 23 வயதான இந்த இளைஞர் பீரோ செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். திருமணமான இவருக்கு சுபாஷினி என்ற மனைவி இருக்கிறார். நேற்று இரவு பாரதியார் நகர் 5வது தெருவில் இருக்கும் மசூதியில் தொழுகை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார் உமர் பாஷா.
அப்போது திடிரென நாலு பேர் கொண்ட மர்மக்கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் காட்டுத்தனமாக குத்தியும் ரத்த வெள்ளத்தில் சாய்த்து உள்ளனர். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உமர் பாஷா உயிரிழந்திருக்கிறார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமர் பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளையும், அரிவாள், கத்தியையும் சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள் கொலையாளிகள் . அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட உமர் பாஷா மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.