மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
மதுரை அழகர் கோவிலில் கொரோனா என்னும் கொடுந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது .
இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதைதொடர்ந்து 5-ஆம் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறும்.
6-ஆம் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7-ஆம் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8-ஆம் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார்.
மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார். 9-ஆம் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 11-ஆம் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.
இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு விழா மற்றும் 13-ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடிதிருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவில் பணியாளர்கள் மும்மரமாக செய்து வருகின்றனர்.