நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில், உள்ள கே.கே.நகரில் உள்ளது. இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.
பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு சம்மந்தமாக பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் தங்கை வீடு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இந்த சோதணை நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல் அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.”