ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு.
இந்த அணை சுமார் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டு தொடர்ச்சியான கட்டுமான பணிகளுக்கு பின்னர் 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் பவானிசாகர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பவானிசாகர் அணையில் 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கலாம் மற்றும் இதன் உயரமானது 105 ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம். கோபி, புளியம்பட்டி. பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொது மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணையில் 2 நீர் மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

1953-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளின் போது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் சென்று பார்வையிட்டடுள்ளார்.
இந்த அணை கட்டப்பட்டதால் இந்த பகுதியில் இருந்த தரிசு நிலங்கள் அனைத்தும் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்கான விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து சிறு சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தேவை பூர்த்தி ஆனது.
பவானிசாகர் அணை 67 ஆண்டுகளில் 102 அடி நீர்மட்டத்தை 22 முறையும் 100 அடி நீர்மட்டத்தை 30 முறையும் எட்டியுள்ளது. அதேபோல் பவானிசாகர் அணை கடந்த 2018, 2019, 2020, 2021,2022-ம் ஆண்டு என தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக நீர்மட்டம் 100 அடியை எட்டி மிக பெரிய சாதனை படைத்துள்ளது.