ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் (2023) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வது குறித்தும், இருநாட்டு உறவை மேம்படுத்தவும் இந்தப் பயணம் முக்கியமானதாக அமையும் என அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து நாங்கள் விவாதித்ததாகவும் கூறினார்.
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாக தாங்கள் கருதுகிறோம், மார்ச் மாதம் இந்தியா வர உள்ளேன், ஒரு வணிகக் குழுவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வோம் என தெரிவித்தார். மேலும் இது ஒரு முக்கியமான வருகையாக இருக்கும் என கூறிய அவர், அது நமது இரு நாடுகளுக்கும் இடையே கொண்டுள்ள உறவை மேம்படுத்தும் என தெரிவித்தார்.