இந்திய அணி T20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்ததிலிருந்து பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் தேர்வானார். இதையடுத்து அனைவரும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக் ஹூடா தேர்வானது கடுமையான விமர்சனகளுக்கு உள்ளானது.
சமீபத்தில் நடந்த இந்திய போட்டிகளிலும் சரி, ஐ.பி.எல் போட்டிகளிலும் சரி சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்புனும் அவரை தேர்வு செய்யாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் இதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சஞ்சு சாம்சன் ஒரு உலக தரமான வீரர் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அணியின் காம்பினேஷன்களையும் நாம் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரோகித், கே.ல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், தினேஷ் கார்த்திக் என 5 வீரர்கள் மாற்றவே முடியாத பலத்தில் உள்ளனர்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 5 பேட்ஸ்மேன்களுக்கு மேல் கண்டிப்பாக பவுலிங்கும் செய்யக்கூடிய வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். ஆட்டத்தின் போது ஏதேனும் ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டால் சிக்கல் ஆகிவிடும். எனவே அவசரத்திற்கு தேவைப்பட்டால் யாரேனும் ஒரு வீரர் பவுலிங்கும் செய்ய வேண்டும்.
அப்படி பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் தீபக் ஹூடா தேவைப்பட்டால் பௌலிங் போடுவார் என்பதால் தான் அவரை அணியில் தேர்வு செய்தோம் என்றார் அந்த அதிகாரி.