இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.இதனையடுத்து புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பதவி ஏற்றவுடன் ரோஜர் பின்னி இரண்டு விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது ,இனி இந்திய வீரர்களின் காயம் எப்படி வருகிறது என்பதையும், அவர்களை எப்படி பாதுகாக்க முடியும் என்ற திட்டத்தை வகுக்கவுள்ளேன். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா காயமடைந்ததால் ஒட்டுமொத்த திட்டமும் சொதப்பியது. இதே போல தீபக் சஹாரும் கடைசி நேரத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது 2வது திட்டம், நாடு முழுவதும் உள்ள மைதான பிட்ச்-களை மாற்றப்போகிறேன். நம் நாட்டின் களங்களில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும். அதுவும் பிட்ச்-ன் தன்மையை மாற்ற வேண்டும்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வேகத்தையும், பவுன்சையும் இந்திய வீரர்கள் பழக வேண்டியதாக உள்ளது. எனவே அதற்கேற்ற வகையில் இந்தியாவில் பிட்ச் உருவாக்கப்படும் என ரோஜர் பின்னி கூறியுள்ளார்.