விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வன்னிபேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகதாஸ், வெங்கடேசன், மற்றும் சுப்பிரமணி, இவர்கள் மூவரும் தினமும் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
அந்தவகையில் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது விவசாயி பத்மநாபன் என்பவர் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக தனது நிலத்தை சுற்றி மின்வேலியை அமைத்துள்ளார். இதை கவனிக்காத முருகதாஸ், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணி மூவரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறிருப்பதாவது :
கடந்த 19ஆம் தேதி இரவு சுமார் 9.45 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (வயது 45), வெங்கடேஷ் (வயது 44) மற்றும் சுப்பிரமணி (வயது 40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.