திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் உதயகுமார் , உமா தம்பதி இவர்களுக்கு ஸ்ரீநிதி, என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஸ்ரீநிதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் காலை வழக்கம் போல் உமா எழுந்து பார்த்த போது மகள் ஸ்ரீநிதி அருகில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தனது மகளின் தற்கொலைக்கு ஏற்கனவே வாடகை வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் நிலையம் அருகே மாணவியின் பெற்றோர் கூறுகையில் : நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத், ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்ததாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதியிடம் இருந்து இரண்டு பவுன் நகையை வாங்கி அடகு வைத்து விட்டதாகவும் தற்போது அந்த வீட்டிலிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் நிலையில் வினோத் அவரது மனைவிடம் இருந்து தாங்கள் ஏழு பவுன் நகை வாங்கி விட்டதாகவும் அதனை திருப்பி தருமாறு கேட்டு வீட்டிற்கு வந்து கேட்டதாகவும், ஆனால் தான் இரண்டு பவுன் நகையை மட்டுமே வாங்கியதாக தெரிவித்த நிலையில் திருவேற்காடு போலீசில் ஏழு பவுன் நகையை வாங்கியதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் வீட்டிற்கு வந்து தங்களது வீட்டில் உள்ள அனைவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததாகவும் இதனால் தனது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாகவும் இதன் காரணமாகவே ஏற்பட்ட மன உளைச்சலில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தனது மகள் செல்போனில் தெரிவித்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும் அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ள நிலையில் தனது மகள் பேசிய போலீஸ் அதிகாரி யார் என்பது குறித்தும் தனது மகள் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.