காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் என்ற இடத்தில இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை உரிய கொரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற உள்ளன.
72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.
பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் பேட்மின்டன் வீராங்கனை சிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்கிறார். முன்னதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராதான் தேசிய கொடியை ஏந்தி செல்ல இருந்தார். இந்நிலையில் காயம் காரணமாக நீரஜ் சோப்ரா விலகியதால், கடந்த 2018ம் ஆண்டு போல மீண்டும் பேட்மின்டன் வீராங்கனை சிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லவுள்ளார்.