22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி கோலாகலமாக தொடக்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . 72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .

முன்னதாக, காமன்வெல்த், பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் சுதீர், தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்ற நிலையில் தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார்.

இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது : காமன்வெல்த் போட்டியில் எம்.ஸ்ரீசங்கரின் வெள்ளி பதக்கம் வென்றது சிறப்பு வாய்ந்தது. பல தசாப்தங்களுக்கு பிறகு ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அவரது ஆட்டம் இந்திய தடகளத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. வரும் காலங்களிலும் அவர் சிறந்து விளங்க அவருக்கு வாழ்த்துகள்.” என்று பிரதமர் மோடி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில்,” காமன்வெல்த், பாரா போட்டியில் சுதீரின் பதக்க எண்ணிக்கைக்கு சிறப்பான தொடக்கம்! அவர் ஒரு மதிப்புமிக்க தங்கத்தை வென்றதன் மூலம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை மீண்டும் காட்டியுள்ளார். தொடர்ந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இனிவரும் அனைத்து முயற்சிகளுக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.” என்று பிரதமர் மோடி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
