22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி கோலாகலமாக தொடக்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . 72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.

8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர் . அந்த வகையில் பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் சுற்று நடந்து முடிந்ததை அடுத்து இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா இணை இரண்டாவது சுற்றில் மலேசியாவின் ஃபெங் சீ லியோங் மற்றும் யிங் ஹோ ஜோடியை எதிர்கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் தடுமாறிய இந்திய இணை பின்னர் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ஷரத் கமல் – ஸ்ரீஜா அகுலா இணை 5-11, 11-2, 11-6 மற்றும் 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினர்.
அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் அசத்திய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மணிகா பத்ரா 2-வது சுற்றில் மின்ஹியுங் ஜீயை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் மணிகா 4-0 (11-4, 11-8, 11-6, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மறுபக்கம் நடந்த மற்றொரு பெண்கள் ஒற்றையர் போட்டியில் 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்த பக்கம் நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்றில் இந்தியாவின் ஷரத் கமல் மற்றும் சத்யன் ஜோடி 3-0 (11-6, 11-1, 11-4) என்ற கணக்கில் வங்காளதேசத்தின் ரஹ்மான் பாம், மொஹ்சின் அகமது ரிடோய் இணையை வீழ்த்தினர். இதன் மூலம் ஷரத் கமல் மற்றும் சத்யன் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
