அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 5ந்தேதி தொடங்கியது.

இந்நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தினந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. மதிப்பெண், கட் – ஆப், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை மெரிட் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், சீட் வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.