ஓசூர் அருகே கனமழைக்கு நிரம்பிய தொரப்பள்ளி ஏரியின் கரை சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாகியும் இந்த ஏரி கரையை அதிகாரிகள் சீர்படுத்தாமல் வேறு பகுதி வழியாக ஏரி நீரை வெளியேற்றுவதால் நீர் வீணாகி வருகிறது.
ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் வயல் மற்றும் மலர் தோட்டங்கள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.
ஏரி நிரம்பியதையடுத்து ஏரி கரையின் மையப்பகுதியில் தாழ்வான இடத்தில் தண்ணீர் வெளியேறி கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் கரை சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அறிந்த ஓசூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பகுதிக்கு சென்று சேதமடைந்த கரையை பார்வையிட்டனர். ஆனால் கரை உடைப்பை சீர் செய்யும் எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, மாறாக ஏரியின் கடைக்கோடியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஒரு பாதையை ஏற்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் கனமழைக்கு நிரம்பிய ஏரியின் தண்ணீர் அனைத்தும் அவ்வழியாக வெளியேறி வீணாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. மழை நேரத்தில் ஏரியில் சேமிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து தண்ணீர் அனைத்தும் சென்றால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் சேதமான ஏரிக்கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாய நிலை உருவாகும், எனவே ஏரிக்கரை உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரியிலிருந்து வீணாக வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.