தூத்துக்குடி, சிதம்பரநகரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் குட்டிபாண்டியன் தலைமை வகித்தார்.
சகோதரத்துவ பண்பாட்டுக் கூடல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.பி.குப்பம் எம்.எல்-.ஏ.வான ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தாழ்த்தப்பட்ட மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கூடியிருந்து வந்தாலும் அவர்களுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நூறுநாள் வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 4 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது-.
ஸ்டெர்லைட் ஆலையால் குடிதண்ணீர் மாசுபடவில்லை என்றும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கட்சி தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. மக்கள் அதனை நம்பி வாக்கு செலுத்தி ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், இன்று நடப்பது வேறுவிதமாக உள்ளது. மக்கள் ஏன் வாக்கு செலுத்தினோம் என்ற மனநிலையில் உள்ளனர். எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.