சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் . இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தார், சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ. வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார்.
அந்த அலுவலகத்தில் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்கு ரூ 30 ஆயிரம் பணம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து இரும்பாலையை சேர்ந்த பெண் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் கம்பெனியில் மூன்று மாதம் வேலைபார்த்தும் அதற்கான சம்பளத்தை அவர்கள் வழங்கவில்லை, சம்பளத்தை கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். மேலும் கம்பெனியின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு . அங்கு சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்காக ஏற்பாடு செய்து வந்ததை அடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெயஜோதி, வேல் சத்ரியன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆபாசமாக ஒரு படம் தயாரிக்க இருப்பதும் தெரியவந்தது.மேலும் அதற்காக இளம்பெண்களை தேர்வு செய்தது தெரிந்தது.
பின்னர் அந்த இருவர் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கம்பெனி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், செல்போன் ,கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .