ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனு என்பவரின் மகன் நல்ல போத்ல ரங்கையா (18)கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாண்டு மாணவனாக 50 நாட்களுக்கு முன்னர் சேர்ந்துள்ளான்.
நல்ல போத்ல ரங்கையா கும்பகோணத்தில் உள்ள தனியார் நிர்வாகிக்கும் விடுதியில் தங்கி உள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு நண்பரை பார்க்க செல்வதாக சக அறை நண்பரிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்ற நல்ல போத்ல ரங்கையா ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக அடுத்த நாள் காலையில் ரயில்வே காவல் நிலையத்தார் கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
கடந்த வியாழக்கிழமை இரவு 11:50 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்ற அந்தியோதயா விரைவு ரயிலில் கும்பகோணம் மேம்பாலம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக அந்த ரயில் இன்ஜின் டிரைவர் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் . இதன் அடிப்படையில் ரயில்வே காவல் நிலையத்தார் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. அருகில் இருந்த செல்போன் மூலம் அவரது பெற்றோர்களை தொடர்பு கொண்ட காவல் நிலையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த மாணவனின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த இறந்த மாணவனின் உறவினர்கள், மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கும்பகோணம் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடற்கூறு ஆய்வின் முடிவினை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து இறந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறந்த மாணவனின் உடற்கூறு ஆய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவ மனையில் உடற் கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன் நல்ல போத்த ரங்கையா ஏன் ரயிலில் அடிபட்டான் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.