கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மதுரவாயல்- நொளம்பூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அடையாறு செல்லக்கூடிய கூவம் ஆற்றில் தண்ணீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரவாயல் நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் தரை பாலம் முழுவதும் நீரில் மூழ்கி தரைப்பாளத்தின் மேல் 2 அடிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தரை பாலத்தை கடக்க முடியாத சூழல் உள்ளதால் சாலையின் இரு புறங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தரைபாலம் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வழியாக கடந்து செல்கின்றனர். கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..