தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ.323.03 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி இன்று அத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்குசெல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு அரசால் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை , நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.