கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிட வேண்டும் என்றும் அவ்வாறு நோயினால் இறந்த ஆடு மாடுகளுக்கு இழப்பீடாக நிவாரணம் வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர், எம் ஜி திம்மா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு, பேசிய விவசாயிகள் ஓசூர் பகுதியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மிக முக்கியமான வருவாய் கால்நடை வளர்ப்புதான். தற்போது கிராமங்களில் மாடுகளுக்கு பெரியம்மை என்ற அம்மைநோய் தாக்கப்பட்டு மாடுகள் இறந்து போவதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, நோய்வாய் பட்ட கால்நடைகளுக்கு தமிழக அரசும் கால்நடை துறையும் இதுவரை எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தமிழக அரசு கால்நடை துறை மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்திட வேண்டும், எனவும் இறந்து போன ஆடு, மாடுகளை கணக்கெடுத்து சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் கூறி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.