திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் கவுதம். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த இளம் பெண்ணின் அறிமுகம் பேஸ்புக் மூலம் கிடைத்துள்ளது.
நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது . இந்நிலையில் திடீரென்று இளம்பெண் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து கவுதமுக்கு ஷாக் கொடுத்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த கவுதம் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்பெண்ணிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவுதம், இளம்பெண்ணின் வீட்டிற்கு கடந்த வாரம் நேரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கவுதம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் கவுதம் மீது புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் கவுதமை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கவுதம் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கவுதமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பேஸ்புக் காதல் கைது வரை சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .