சென்னையில் நேற்று இரவு முதல் மழை தாறுமாறாக வெளுத்து வாங்கி வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.
அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர் .
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள், 1913, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற இலவசஎண்களில் புகார் அளிக்கலாம். மேலும் மாநகராட்சியின் “நம்ம சென்னை செயலி” அல்லது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வழியாகவும் பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.