நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு அசாம் மாநிலத்தில், திபு பெரு நகரத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட அதிகாரித்து வருகிறது. இதையடுத்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சுகாதார அமைச்சர் கேசப் மகந்தா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 20க்கும் கூடுதலானோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை முன்னிட்டு கர்பி அங்லோங் தன்னாட்சி கவுன்சில் சார்பில் விடப்பட்ட உத்தரவில், தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால், தடுப்பு நடவடிக்கையாக திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.
இந்த உத்தரவின் படி இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெங்கு பரவலை தடுக்க 10 குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.