சென்னை,பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40) இவரது தம்பி ராஜேஷ் (37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்த அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார் .
இதனைத் தொடர்ந்து ராஜேஷ் சோதனை செய்த போது தனது மனைவி மற்றும் அவரது தாயாரின் சுமார் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் காணாமல் போனது தெரியவந்தது.
இதனையெடுத்து இச்சம்பவம் குறித்து ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜேஷின் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான ஸ்வாதியிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது . இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் தெரிய வந்தது . மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஸ்வாதிக்கு கார் வாங்கிக் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை சேகர் திருடியது உறுதியானதால் அவரையும் அவரது தோழி ஸ்வாதியையும் பூந்தமல்லி போலீசார் கைது செய்து அவரிடமிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.