இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார் ரணில் விக்ரமசிங்கே.
இந்நிலையில் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்தார்.
போராட்டங்கள் நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய அவர் வீடு இல்லாத நிலையில் தான் எவ்வாறு என் வீட்டுக்குப் போக முடியும் என கேள்வி எழுப்பினார்.
தனது சொந்த வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்கே, தான் வீட்டுக்குப் போக வேண்டுமானால் முதலில் போராட்டக்காரர்கள் தனது வீட்டை சீர் செய்து தர வேண்டும் என்றார்.
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் , சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத வரை பிற நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி அளிக்க முன்வராது என்றார்.
சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி அளிக்காத நிலையில், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பிரச்னைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை குற்றம் சாட்டுவதால் பயனில்லை என தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் எனறார்.