தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் அகரம் தளத்தில் ஒன்பது அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு வெளிப்பட்டுள்ளது. பிப்ரவரி 13 முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
கீழடியில் ஒன்பது, அகரத்தில் ஆறு, கொந்தகையில் நான்கு என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கீழடியில் ஒரு உறைகிணறும், அகரத்தில் நான்கு உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன.
அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒன்பது அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன. 8ம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக ஒன்பது அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது. உறைகிணறுகள் 80 செ.மீ விட்டமும், 20 செ.மீ உயரமும் கொண்டவையாக உள்ளன. மேலும் அகழாய்வு பணிகள் நடந்து வருவதால் உறைகிணற்றின் உயரம் இன்னமும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.
கீழடி அகழாய்வில் கடந்த ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியில் தமிழகத்திலேயே மிகப்பெரிய உறைகிணறு (32 அடுக்குகள் ) கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்துடன் அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற உள்ளதையடுத்து அகரத்தில் உறைகிணற்றின் உயரம் அதிகரிப்பதால் பணிகள் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.