இந்திய அணி தற்போது T20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு பயிற்சி ஆட்டங்களிலும் பங்குபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 57 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் என சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் 20 ரன்களுக்குள் அவுட்டாகி சென்றனர்.
இதனால் 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வெற்றி பாதைக்கு அருகில் சென்றது. இந்நிலையில் கடைசி 2 ஓவர்களில் 16 ரன்களே தேவைப்பட்டதால் இந்திய அணி தோற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால் கடைசி 2 ஓவர்கள் பெரும் ட்விஸ்ட்டை கொடுத்தது.ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஃபிஞ்சும், 2வது பந்தில் ஜோஸ் இங்கிலிஸும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்த 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே சென்றது. இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுணையை கொடுத்தார் ரோகித் சர்மா. அதாவது ப்ளேயிங் 11-லேயே இல்லாத முகமது ஷமியை 20வது ஓவரை போட அழைத்தார். கொரோனா பாதிப்புக்கு பின்னர் முதல் முறையாக அவர் விளையாடினார். முதல் 2 பந்துகளில் 4 ரன்கள் சென்றது. அடுத்த 4 பந்துகளில் தனது முழு ஃபார்மை நிரூபித்தார் ஷமி.கடைசி ஓவரில் மட்டும் நான்கு விக்கெட்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார் ஷமி