நேற்று துபாயில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய ஒப்பனர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் அதிரடி காட்டினர்.
அதன் பின் சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுக்க கோஹ்லி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், 5 பவுலர்களுடன் சென்றது, மிடில் ஆர்டர் சொதப்பல் என பல்வேறு காரணங்களை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு கேப்டன் ரோகித் சர்மாவே விளக்கம் கொடுத்துள்ளார்.
இது அழுத்தமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். இதனால் தான் ரிஸ்வான் – நவாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்த போதும் கூட நிதானம் காத்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் சற்று பெரிதாகிவிட்டது தான் பிரச்சினை. அவர்களின் பேட்டிங் மிக சிறப்பாக அமைந்திருந்தது. அதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.எந்த மைதானமாக இருந்தாலும் 180+ என்பது நல்ல இலக்கு ஆகும். ஆனால் எப்படிபட்ட ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் போது அசால்ட்டான மனநிலையுடன் இருக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டுள்ளோம்.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அந்த சமயத்தில் அவுட்டாகியிருக்க தேவையில்லை. அது ஆட்டத்தின் போக்கை சற்று மாற்றியிருந்தது.இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இளம் வீரரான அர்ஷதீப் சிங் முக்கியமான கேட்சை விட்டது பேசும்பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது