அரசுப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது. அத்துடன் காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வை இடவேண்டும் . தரமான மற்றும் சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு போதுமான அளவு வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின்படி உணவு வழங்குதல் உறுதி செய்ய வேண்டும். காய்கறி சுத்தம் செய்தல், சுத்தமாக சமைத்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரத்தை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து தரத்தை அறிய வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.