வெறும் 75 ஆயிரம் பேருக்கு மட்டும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்குவது எந்த வகையில் நியாயம் என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்
பிரதமர் மோடி கடந்த மாதம் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய செயலகத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். அப்படியானால், 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு அரசுத்துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, பிரதமர் மோடி வெறும் 75 ஆயிரம் நியமன கடிதங்களை மட்டுமே வழங்கி இருக்கிறார். பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய செயலகத்தில் 1,600 காலி பணியிடங்கள் உள்ளன. என்ன காரணம்? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.