தமிழ்நாட்டில் நாளை முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று அல்லது நாளை அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என்றும், அது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் . நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்திருக்கிறது.
குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,திருவாரூர், விழுப்புரம் ,கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும். புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.