அண்மையில் நடந்து முடிந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் . புதிய துணை குடியரசு தலைவர் தேர்தல், நாடாளுமன்றத்தில் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.
இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பதவ்வியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.