இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரில் மட்டும் இந்திய மகளிர் அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியே அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மார்ச் 2002-ல் கோஸ்வாமி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 20 ஆண்டுகளில் அவர் 12 டெஸ்ட், 68 டி20 போட்டிகள் மற்றும் 201 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஆறு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.