கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜீலை 17 ம் தேதி அன்று மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி கட்டிடம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டும் வாகனங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வகுப்பறையில் உள்ள பொருட்கள் என முழுவதும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டசம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளியை சீரமைக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளியை சீரமைக்க உரிய அதிகாரிகளை நியமித்தும் கள நிலவரங்களை ஆய்வு மேற்கொண்டும் 45 நாட்களுக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய முன் தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தி பள்ளியை புனரமைக்க 45 நாட்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் போலீஸ் பாதுகாப்புடன் சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.