காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற விளக்கொளிப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும், பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் இந்தாண்டு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதையொட்டி கோவிலிருந்து உற்சவர் விளக்கொளிப் பெருமாள் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடனும்,மரகதவல்லித்தாயாருடனும் அருகிலுள்ள வேதாந்த தேசிகர் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு தேசிகருக்கு மரியாதை உற்சவம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உற்சவர் வேதாந்த தேசிகருடன் பெருமாளும்,தாயாரும் தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர்.
பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, வாண வேடிக்கைகளுடன் தெப்ப குளத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.மேலும் இந்த தெப்பத்திருவிழாவைக்காண காஞ்சிபுரம் மாநகரில் இருந்து ஏராளமான பக்தர்களும்,பொது மக்களும் வந்து சாமி தரிசனம் செய்தனர் .