நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் அதற்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் தற்போது முதற்கட்டமாக 100 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 91 ஸ்கார்பியோ வாகனங்களும், ஆணையர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஆகியோரின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும், என மொத்தம் 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.