இந்திய எல்லையை தாண்டி இலங்கைக்குள் மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைதுசெய்வதுடன் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையின் இந்த கொடூர செயல் கடந்த சில மாதங்களாக அதிகம் நடைபெற்று வருகிறது. உதாரணமாக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை இலங்கை கடற்படைந்த கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க சென்ற 10 இந்திய மீனவர்களை 22 ஆம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுவரை தமிழக மீனவர்களின் 95 படகுகள் இலங்கையின் வசம் உள்ளது .
இலங்கையின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி முல்லைத்தீவு அருகே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.