நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் மாநகராட்சியின் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது . திருக்குறள் வாசித்தபடி கூட்டத்தில் உரையாற்றிய மேயர் சரவணன் பேசுகையில், தமிழக முதல்வர் அறிவித்தபடி நெல்லை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் 34 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் , பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில் 42 கோடி ரூபாயில் புதிய சாலைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
இருப்பினும் பல்வேறு இடங்களில் திட்ட பணிகள் முடிவடையாததால் பொதுமக்களின் அவசர போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு 12 இடங்களில் மாற்று சாலைகள் போடப்படும் என்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெறும் பருவமழை நேரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது எனவே நெல்லை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டெங்கு இல்லா மாநகராட்சியாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.