ஜார்க்கண்டில் சுரங்க முறைகேடுகள் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஹேமந்த் சோரனிடம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்காக வருவார் என்று ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல்வர் ஹேமந்த் விசாரணக்காக ஆஜராகவில்லை.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு ஏற்கனவே சத்தீஸ்கரில் ஒரு நிகழ்ச்சி இருந்தபோது இன்னும் அமலாக்கத்துறையால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. நான் ஏதாவது குற்றம் செய்திருந்தால் என்னை தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் சம்மன் அனுப்புகிறீர்கள் என்று தெரிவித்தார் .