இன்று மாலை நிகழ இருக்கும் சந்திர கிரணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் நடை தற்காலிகமாக மூடப்படுகிறது . கிரகண காலத்திற்கு பின்னர், சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைப்பெறும்.
இந்நிலையில், இன்று நிகழவுள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழும் போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் நடைசாத்தப்படுவதும், பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்று .
அந்த வகையில் இன்று பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
இதை தொடர்ந்து உச்சி கால அபிஷேகம் காலை 9 மணிக்கும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க உள்ளது. அதன் பின்னர் மதியம் 1.30 மணிக்கு கோவில் சந்திர கிரகணத்தையொட்டி நடை சாத்தப்படுகிறது அந்த நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பின்னர் இரவு 7 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.