நாடு சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், அதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பாரத பிரதர் மோடி ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனதின் குரல் வானொலி உரையில், நமது தேசியக் கொடியை உருவாக்கிய பிங்லி வெங்கைய்யாவின் பிறந்த தினம் ஆகஸ்ட் 2ம் தேதி என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அன்றைய தினத்தில் இருந்து சுதந்திர தினம் கொண்டாட உள்ள ஆகஸ்ட் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்களின் சமூக பக்கங்களில் display picture (DP) ஆக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக பக்கத்தில் DP ஆக இருந்த தனது படத்திற்குப் பதிலாக தேசியக் கொடியை வைத்துள்ளார்.
மூர்வண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாம் பெருமிதம் கொள்ளும் மூவர்ணக்கொடியை நமக்கு வழங்குவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நாடு என்றென்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்த சிறப்பு தருணத்தில், நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு கூட்டு இயக்கத்திற்கு தேசம் தயாராக உள்ளதாகவும், தான் தனது சமூக ஊடகப் பக்கங்களில் DPயை மாற்றியுள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.