புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் அரசு சார்பு மற்றும் விநியோகஸ்தர் மூலமாக புதுச்சேரியில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தனியார் பால் நிறுவனங்கள் மூலமாகவும் புதுச்சேரியில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பாலுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும், இந்த நிலையில் கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில் 50 ஆயிரம் லிட்டர் பால் புதுச்சேரியில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் புதுச்சேரி அரசு கொள்முதல் செய்கிறது.
மீதம் தேவையான பாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி அரசு கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் வெளி மாநில முகவர்களுடன் ஏற்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் பால் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் புதுச்சேரியில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்
நபர் ஒருவருக்கு ஒரு பாக்கெட் பால் மட்டுமே இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உடனடியாக பால் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.